search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் புரிதலில் உள்ள காதல்
    X

    கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் புரிதலில் உள்ள காதல்

    • புரிதல் இருந்தால் தான் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
    • புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும்.

    கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக...

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் இந்த மனுஷனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். தன்னுடைய கணவனுக்கு தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.

    எனவே அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

    கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில் உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது. கணவன் குறிப்பை படித்துவிட்டு குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கிவிட்டு தன் செல்போனை எடுத்து பேசினான்.

    அதில் பேசும்போது, கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு என்று சொல்லிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.

    உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவள், அவர் நம்மை தேடவில்லை, கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்த குறிப்பை எடுத்து பார்த்தால்.

    அதில், ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பசிக்குது, கடைக்கு போய் பிரட் வாங்கி வருகிறேன். நீ எனக்கு பிரட் ஆம்லெட் போட்டு கொடு சாப்பிடுறேன். உனக்கு ஏதாவது வேண்டும்னா, எனக்கு போன் பண்ணு. இந்த உலகத்தில் மற்றவர்களை விட நான் உன்னை தான் அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பு முத்தங்கள்! என்று எழுதி இருந்தான். இதைக்கண்டதும் மனைவிக்கும் ஒரே ஆனந்தம்.

    கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அந்த பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரசியமிக்க துணையாக இருக்கலாம்.

    Next Story
    ×