
உதடு சிகப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். இதன் மூலம் உதடுகள் கருமை அடைவதோடு, வறண்டு போகவும் நேரிடும். இதை தவிர்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உதடுகள் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
அடிக்கடி தேநீர் அருந்துபவரின் உதடுகள் கருத்து காணப்படும். இதனை தவிர்க்க தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழச்சாறை அருந்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைப்பதுடன் உதடுகளை மெருகேற்றும்.
முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உதடுகளுக்கும் கொடுக்க வேண்டும். அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தும் போது உதட்டிற்கு தனி கவனம் செலுத்துவது நல்லது. உதடுகளை தூய்மைப்படுத்த தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு அரை டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, 4 துளிகள் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு போன்றவற்றை நன்றாக கலந்து சர்க்கரை கரைவதற்கு முன்பு உதட்டின் மீது பூசி 2 முதல் 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் மிருதுவாகும்.
பீட்ரூட் சாறு 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு கால் தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை 3 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு கண்ணாடி குப்பியில் காற்று புகாதவாறு மூடி குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாக்கவும். இதனை தினமும் 2 முறை தடவி வந்தால் உதடுகள் மென்மையாகவும் சிவப்பாகவும் மாறும்.
பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் அவை சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சியளிக்கும்.
சிறிது கஸ்தூரி மஞ்சளுடன், பசுவின் பால் கலந்து பூசி வந்தால் உதடுகள் பளபளப்பாகவும் சிகப்பாகவும் மாறும்.