search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை
    X
    இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை

    இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை

    சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
    தினமும் காலை நேரங்களில் முகம் மற்றும் கூந்தல் அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களில் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.

    இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை என்னென்ன தெரியுமா?

    இரவில் நன்றாக தூங்கி எழும்போது மனது புத்துணர்ச்சி பெறுவது போன்று, தூங்கி எழும்போது அன்றாடம் சருமமும் புத்துணர்ச்சி பெறும். தூங்கும் இரவு நேரத்தில் தூசுவோ, அழுக்கோ சருமத்தில் படாது. அசுத்தக்காற்றும் அண்டாது. வெயில், சூடு எதுவும் படாமல் சருமம் இரவு நேரத்தில் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் இரவில் சருமத்திற்கு கிடைப்பதால், தூங்கச் செல்வதற்கு முன்னால் சருமத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது.

    காலை நேரத்தில் முகத்தில் கிரீம் பூசி மேக்கப் போட்டிருப்பீர்கள். அதை முழுமையாக நீக்குவதற்கு கிளன்சிங் செய்வது மிக அவசியம். சருமம் நன்றாக சுவாசிப்பதற்காகவும், தானே புதுப்பித்துக்கொள்வதற்காகவும் இதை செய்யவேண்டும். முகத்தில் இருக்கும் தொற்றுக்கள், தூசுக்கள், எண்ணெய்த் தன்மை போன்றவைகளை போக்கி சருமத்தை சுத்தமாக்கும் பணியை கிளன்சிங் செய்கிறது. சருமத்திற்கு பொருத்தமான ‘பேஸ் வாஷ்’ பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தவேண்டும்.

    பெண்கள் கிளன்சரை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். மூன்று பாதாம் பருப்பையும், இரண்டு பெரிய தேக்கரண்டி அரிசியையும் கலந்து நன்றாக அரைத்து தூளாக்குங்கள். அதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைக்கு தக்கபடி பயன்படுத்தவேண்டும். அதில் சிறிதளவு பால் கலந்து கிளன்சராக பயன்படுத்த வேண்டியதுதான்.

    பசும்பாலை கொதிக்கவைக்காமல் அப்படியே குளிரச்செய்து அதனை பயன்படுத்தி இரவில் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த கிளன்சராக பயன்படும். எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமத்தைகொண்டவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து முகத்திற்கு கிளன்சராக பயன்படுத்தலாம். சாதாரண சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    சருமத்தில் இருக்கும் பி.எச்.அளவு சீரற்ற நிலையில் இருந்தால், சரும பிரச்சினைகள் தோன்றும். அதனால் சருமத்தில் ‘டோனிங்’ செய்து பி.எச். அளவை சீராக்கவேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை நன்றாக கழுவினாலும் சரும துவாரங்களில் அழுக்குகள் சேர்ந்திருக்கத்தான் செய்யும். அதனை முழுமையாக நீக்கினால்தான் முக அழகை பாதுகாக்கமுடியும். இதற்கு டோனிங் துணைபுரியும்.

    வறண்ட சருமத்திற்கும், எண்ணெய்த்தன்மையான சருமத்திற்கும் பொருத்தமான ‘டோனர்’களை அழகு சாதன பொருட்களை விற்கும் கடைகளில் வாங்கலாம். அதில் ஆல்கஹால் கலக்காததை தேர்வு செய்யவேண்டும்.

    கொதித்து ஆறிய நீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு ரோஜா இதழ்களை போட்டு சூரிய வெளிச்சத்தில் ஒரு நாள் முழுக்க வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி எடுங்கள். இதுதான் ரோஸ்வாட்டர். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இதில் பஞ்சை முக்கி, நன்றாக முகத்தை தேய்த்து சுத்தப்படுத்துங்கள். பிரிட்ஜில் குளிரவைத்த கிரீன் டீ அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றையும் ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.

    இரவில் நீங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்குபவர்களாக இருந்தால், உங்களுக்கு கூந்தல் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். தினமும் இரண்டு முறையாவது தலைமுடியை சீப்பால் நன்றாக சீவவேண்டும். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.

    கூந்தலை சீவிவிடாமல் இருந்தால் பொடுகு அதிகரிக்கும். பிளாஸ்டிக் சீப்பிற்கு பதில் மரத்தாலான சீப்பை பயன்படுத்தினால் முடி உடைந்துபோவதை ஓரளவு தடுக்கலாம். முடியை நன்றாக சீவி கட்டிவைத்துக்கொண்டு தூங்கவேண்டும். கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்கினால் தலையணை, போர்வையில் முடி உரசி, உடைந்துபோகும்.

    சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமை தெரியாமல் இருக்க சருமத்திற்கு தண்ணீர்த்தன்மை மிக முக்கியம். வறண்ட சருமத்தினர் கிரீமை அடிப்படையாகக் கொண்டவற்றையும், எண்ணெய் சருமத்தினர் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டவற்றையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். டோனரை சருமம் நன்றாக உறிஞ்சிய பின்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி நிறைய தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதில் மூன்று துளி வைட்டமின் ஈ ஆயில் கலந்து மாய்ஸ்சரைசராக முகத்தில் பூசலாம்.
    Next Story
    ×