என் மலர்
பொது மருத்துவம்

களிமண்-செம்பு-வெள்ளி-பித்தளை-கண்ணாடி: தண்ணீர் குடிக்க சிறந்த பாத்திரம் எது?
- மற்ற பாத்திரங்களை போல் அதிகம் பராமரிக்க வேண்டியதில்லை.
- குளிர்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது வெள்ளி.
உடல் நலனை பேணுவதற்கு தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எதில் பருகுகிறோம் என்பதும் முக்கியமானது. ஏனெனில் உலோக பாத்திரங்கள் தண்ணீரை சேமித்து மட்டும் வைப்பதில்லை. சில உலோகங்கள் தண்ணீரின் பி.எச். அளவை மாற்றும், தாதுக்களை கண்காணிக்கும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்பதை நவீன அறிவியலும் ஓரளவுக்கு ஆதரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் தண்ணீரை சேமிக்க, குடிக்க பயன்படுத்தும் பாத்திர தேர்வுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அது பற்றி பார்ப்போம்.
கண்ணாடி:
கண்ணாடி டம்ளரில் தண்ணீர் பருகுவதும் சிறப்பானது. தண்ணீரின் சுவையை தக்கவைத்து ருசிக்க வைக்கும்.
துருப்பிடிக்காத எக்கு:
'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' எனப்படும் துருப்பிடிக்காத எக்கு பாத்திரங்கள்தான் பெரும்பாலான வீடுகளின் சமையலறையை ஆக்கிரமித்திருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்படும் டம்ளரிலேயே பலரும் தண்ணீர் பருகுகிறார்கள். இது துருப்பிடிக்காதது, எதிர்வினை புரியாது.
மற்ற பாத்திரங்களை போல் அதிகம் பராமரிக்க வேண்டியதில்லை.
எதை தேர்வு செய்வது?
அன்றாட பயன்பாட்டுக்கு துருப்பிடிக்காத எக்கு பாத்திரங்கள்தான் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட. செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். அவைகளை சரியாக சுத்தம் செய்திருந்தால் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். கோடை காலங்களின்போது வெள்ளி அல்லது களிமண் பாத்திரங்களை உபயோகிக்கலாம்.
பித்தளை:
செம்பு மற்றும் துத்தநாக கலவையில் தயாரான உலோகம், பித்தளை. இதில் இருக்கும் துத்தநாகம் உடலில் இருக்கும் செல்களை பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும். வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தும். கூந்தல் முடி, சருமத்துக்கும் நன்மை தரும். குறிப்பாக மெதுவான வளர்சிதை மாற்றம், மந்தமான சருமம் கொண்டவர்களுக்கு பித்தளை சிறந்த தேர்வாக அமையும். அதேவேளையில் எலுமிச்சை சாறையோ, அமிலத்தன்மை கொண்ட பானங்களையோ அதில் ஊற்றக்கூடாது. ஏனெனில் அமிலம் பித்தளையுடன் வினைபுரிந்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.
களிமண்:
இயற்கையாகவே தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை களிமண் பாத்திரங்களுக்கு உண்டு. உடலில் அமில காரத்தன்மையை சமநிலைப்படுத்தும். பி.எச். அளவை சீராக பராமரிக்க உதவும். களிமண் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீரில் மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட தாதுக்களின் பங்களிப்பும் கூடும். நவீன கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்களால் கொடுக்க முடியாத நறுமணத்தை களிமண் பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் அளிக்கும். களிமண் பாத்திரத்தை கவனமாக கையாளாவிட்டால் உடைந்து போய்விடும் என்பது மட்டுமே இதன் பாதகமான அம்சமாகும்.
வெள்ளி:
குளிர்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது வெள்ளி. பல நூற்றாண்டுகளாக இதன் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளி அயனிகள் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணை புரியும். வெள்ளி டம்ளரில் நீர் ஊற்றி வைப்பது குளிர்ச்சியையும், புத் துணர்ச்சியையும் உணர வைக்கும்.
பழங்காலத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது.
செம்பு:
சுத்திகரிப்பு பணியை செவ்வனே செய்யும் தன்மை செம்புக்கு உண்டு. இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. ஒரு செம்பு பாத்திரத்திலோ, செம்பு டம்ளரிலோ தண்ணீரை சில மணி நேரம் ஊற்றி வைத்தால் அதனுடன் செம்பு அயனிகள் கலந்துவிடும். இந்த செயல்முறை 'ஒலிகோ டைனமிக் விளைவு' என்று அழைக்கப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை இயற்கையாகவே அழிக்க செம்பு உதவும்.
செம்பு டம்ளரில் உள்ள தண்ணீரை குடிப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும். தைராய்டு செயல்பாட்டை சமநிலைப்படுத்தும். கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும். மெலனின் உற்பத்தியை ஒழுங்குபடுத்தவும், சருமத்தை மேம்படுத்தவும், முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.






