search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    உட்கார்ந்தபடியே தூங்கினால் இவ்வளவு பிரச்சனை வருமா?
    X

    உட்கார்ந்தபடியே தூங்கினால் இவ்வளவு பிரச்சனை வருமா?

    • உட்கார்ந்தோ, நின்றபடியோ தூங்கும் வழக்கத்தை விலங்குகள் பின்பற்றும்.
    • சிலர் பஸ், ரெயில் பயணங்களில் அமர்ந்த நிலையிலேயே தூங்குவதற்கு பழகி விடுவார்கள்.

    உட்கார்ந்த இடத்திலேயே தூங்கும் வழக்கத்தை சிலர் கடைப்பிடிப்பார்கள். எங்காவது அமர்வதற்கு சிறிது நேரம் கிடைத்துவிட்டால் போதும். சட்டென்று கண்களை மூடிய நிலையில் தூக்க நிலைக்கு சென்றுவிடுவார்கள். பஸ், ரெயில் பயணங்களின்போது அமர்ந்த நிலையிலேயே தூங்குவதற்கு பழகியும் விடுவார்கள்.

    அப்படி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று திரும்பிய பிறகு முதுகுவலி, கழுத்து வலி, தோள்பட்டையில் அசவுகரியம் போன்ற பிரச்சினைகளை அனுபவித்திருக்கிறீர்களா? அவை நீண்ட நேரம் உட்கார்ந்தபடி அசையாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகக்கூட இருக்கலாம். உட்கார்ந்தோ, நின்றபடியோ தூங்கும் வழக்கத்தை விலங்குகள் பின்பற்றும். ஆனால் மனித உடல் அத்தகைய நடைமுறைக்கு பழக்கப்படவில்லை.

    உட்கார்ந்த நிலையில் தூங்கும்போது, உடல் செயலற்ற நிலையில் இருப்பதால், மூட்டுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை விறைப்பு தன்மையும் அடையலாம். இது 'வெயின் திரோம்போசிஸ்' எனப்படும் ரத்த உறைவு பிரச்சினைக்கு வழிவகுத்து விடும். அதாவது உடலில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகளில், பொதுவாக கால்களில் ரத்தம் உறைய தொடங்கி விடும். அதன் காரணமாக கால்களில் வலி அல்லது வீக்கம் ஏற்படும்.

    நீண்ட நேரம் அசைவில்லாமல் இருப்பதும், ஒரே நிலையில் இருப்பதும் முதுகு வலி மற்றும் உடல் வலிகளை உண்டாக்கும், உடல் தோரணையும் பாதிப்புக்குள்ளாகும். அசைவில்லாத தன்மையில் இருப்பது மூட்டுகள் விறைப்பு அடைவதற்கு வழிவகுக்கும். வலி அதிகரிக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

    ரத்த உறைவின் ஒரு அங்கமாக நுரையீரல் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் சிக்கல் நேர்ந்தால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ரத்த உறைவு காரணமாக தினமும் 20-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    கால் தசைகள், கணுக்கால் அல்லது பாதத்தில் வீக்கம் மற்றும் காயம் ஏற்படுதல், சருமம் சிவத்தல், திடீரென்று கணுக்கால் அல்லது கால்களில் வலி ஏற்படுதல் போன்றவை 'வெயின் திரோம்போசிஸ்' எனப்படும் ரத்தம் உறைதல் பிரச்சினைக்கான அறிகுறிகளாகும்.

    உட்கார்ந்த நிலையில் தூங்க விரும்பினால், சாய்வான நிலையில் இருக்கும் இடத்தை நாடுவது நல்லது. இருப்பினும் கர்ப்பிணி பெண்களுக்கு உட்கார்ந்த நிலையில் தூங்குவது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் படுத்து உறங்குவது கடினமானது. மேலும் மூச்சுத்திணறல், தூக்கத்தின்போது சுவாசம் தடைபடும் பிரச்சினையை எதிர்கொள்பவர்களும் உட்கார்ந்த நிலையில் தூங்கலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×