search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரத்த தானம்
    X
    இரத்த தானம்

    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்

    மனித உயிர்களை காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் ரத்ததானம், தானங்களில் சிறந்தது. ஒருவர் செய்யும் ரத்த தானம், ரத்தம் பெறுபவருக்கு கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு.
    மனித உயிர்களை காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் ரத்ததானம், தானங்களில் சிறந்தது. ஒருவர் செய்யும் ரத்த தானம், ரத்தம் பெறுபவருக்கு கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு. ஒவ்வொரு முறையும் தானமாக கொடுக்கப்படும் ரத்தம் மூலம் 3 பேரை காப்பாற்ற முடியும்.

    ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 10.8 கோடி யூனிட் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இதில் 50 சதவீதம் வளர்ந்த நாடுகளில் பெறப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானம் செய்கிறார்கள். ரத்தத்தை தானமாக கொடுத்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. இது முற்றிலும் தவறு.

    மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின் போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்தவர்கள் இழந்த இந்த ரத்தம் 2 நாட்களில் சுரந்துவிடும். 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவை எட்டிவிடும். எனவே, 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம்.

    ஏழை நாடுகளில் பெறப்படும் ரத்தத்தில் 65 சதவீதம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே வளர்ந்த நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் ஆயிரம் பேருக்கு 37 பேர் ரத்த தானம் செய்கிறார்கள். ஆனால், வளரும் நாடுகளில் 12 பேரும், ஏழை நாடுகளில் 4 பேர் மட்டுமே ரத்த தானம் செய்கிறார்கள்.

    நல்ல உடல்நலத்துடன், 45 கிலோவுக்கு மேல் எடை உள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றின் அளவை பார்த்த பிறகே, ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம். புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் ரத்த தானத்தை கருதலாம். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள ரத்ததானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு, தானம் செய்யும்போது சீரடைகிறது. எனவே, இந்த பிரச்சினை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம்.

    மாதவிடாய் தொடங்கிய 3 முதல் 5 நாட்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த தானம் செய்யக்கூடாது. ரேபிஸ் நோய் சிகிச்சைக்குப் பின் ஓராண்டுவரையும், டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்களுக்கு சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரையும், மது அருந்தியபின் 24 மணி நேரம் வரையும் ரத்த தானம் செய்யக்கூடாது.

    எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள், மஞ்சள் காமாலை உள்பட கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், இதர தொற்று உள்ளவர்களின் ரத்தத்தை பெறக்கூடாது. இதயநோய், காசநோய், வலிப்புநோய், ஆஸ்துமா, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இன்சுலின் பயன் படுத்துபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோயாளிகள், ரத்தம் உறையாமை பிரச்சினை உள்ளவர்கள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.
    Next Story
    ×