search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காட்பாடியில் உள்ள உடற்பயிற்சி கூடம் வெறிச்சோடி உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    காட்பாடியில் உள்ள உடற்பயிற்சி கூடம் வெறிச்சோடி உள்ளதை படத்தில் காணலாம்.

    ஊரடங்கால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் கட்டுக்கோப்பான உடற்தகுதியை இழந்த இளைஞர்கள்

    ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்குவதால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் கட்டுக்கோப்பான உடல் தகுதியுடன் இருப்பதை இளைஞர்கள் இழந்து வருகின்றனர். இதனால் உடற்பயிற்சி நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
    ஆண், பெண்கள் அனைவரும் உடலை கட்டுக்கோப்புடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி நிலையங்கள்தான் ஆதாரமாக உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது பொருளாதார இழப்பை தடுக்க ஊரடங்கில் மாற்றமம் செய்யப்பட்டு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு தொழில் நிறுவனங்கள், கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வாழ்க்கையும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

    டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கூட அனுமதி வழங்கப்பட்டு விட்டது. அங்கு தினமும் பல கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்து வருகிறது. ஆனால் இளைஞர்களை சாதனை படைக்க வைக்கும் உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்) திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது உடலை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர். பலர் தங்களது வீட்டின் மொட்டை மாடியை உடற்பயிற்சி கூடமாக மாற்றி உள்ளனர். எனினும் பயிற்சி செய்வதற்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    உடற்பயிற்சி மேற்கொள்வதினால் சுய ஒழுக்கத்துடன் வாழ முடியும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளில் இருந்து இளைஞர்கள் மீள உடற்பயிற்சி ஒரு அருமருந்தாகும். அந்த வகையில் உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மருத்துவமனைகள் என்றே கூறலாம்.

    உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்படாததால் ராணுவம், மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீஸ், தமிழக போலீஸ் போன்ற பணிகளுக்கு இனி வருங்காலங்களில் ஆள்சேர்ப்பு முகாம்கள் நடைபெற்றால் அதில் பெரும்பாலான இளைஞர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பளுதூக்குதல், ஆணழகன் போட்டிகளுக்கும் பயிற்சி பெற முடியாத நிலையில் உள்ளனர்.

    வேலூர் மாவட்ட உடற்பயிற்சி நிலைய நலச்சங்க மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மேலும் சில சங்கங்கள் உள்ளது. அச்சங்ககள் மற்றும் அந்தந்த ஜிம்கள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்த ஆணழகன் போட்டிகள் நடத்தப்படும். ஊரடங்கு காரணமாக ஆணழகன் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் மாநில மற்றும் தேசிய அளவில் ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். பலர் வெற்றிவாகை சூடி உள்ளனர்.

    அனைத்து விளையாட்டுகளுக்கும் அடிப்படை ஆதாரமாக உடல் வலுவை தருவது ஜிம்கள். பளுதூக்குதலில் ஆர்வம் கொண்டவர்களும் ஜிம்களுக்கு தான் முதலில் வருகிறார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் ஜிம்கள் நடத்துபவர்கள் பெரும்பாலும் கடன் வாங்கித்தான் நடத்துகிறார்கள். தற்போது கடனை செலுத்த முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். பெரும்பாலான ஜிம்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் வாடகையும் அவர்களால் செலுத்த முடியவில்லை. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். ஜிம்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×