search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டு சிறையில் அடைபட்டிருக்கும் சுட்டிக் குழந்தைகள்
    X
    வீட்டு சிறையில் அடைபட்டிருக்கும் சுட்டிக் குழந்தைகள்

    வீட்டு சிறையில் அடைபட்டிருக்கும் சுட்டிக் குழந்தைகள்

    ஊரடங்கு காரணமாக வீட்டு சிறையில் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு ‘வெளியே சென்றால் கொரோனா பூதம் வந்துவிடும்’, என பெற்றோர் பயமுறுத்தி வைத்துள்ளனர். இதனால் காரணம் தெரியாமலேயே அடிக்கடி கை கழுவி கொள்கிறார்கள்.
    கொரோனா எனும் கொடிய ஆட்கொல்லி வைரஸ் காரணமாக உலக நாடுகளே பீதியில் உறைந்து போயிருக்கின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸ் புரையோடி கிடப்பதால் மக்கள் அனைவரும் பயம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறவே யோசிக்கிறார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது.

    ஊரடங்கு காரணமாக குழந்தைகள் தங்களின் சந்தோஷத்தை பறிகொடுத்து விட்டார்கள் என்றால் அது மிகையல்ல. பட்டாம்பூச்சிகள் போல சிறகடித்து விளையாடி மகிழவேண்டிய குழந்தைகள் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடாதவாறு பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்கள். இதனால் குழந்தைகள் விளையாட்டுகள் இல்லாமல் தெருக்கள் அமைதியாக காட்சியளிக்கின்றன.

    முன்பெல்லாம் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும்போது, ‘பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்‘, என்று பயமுறுத்தி தாய்மார்கள் சோறு ஊட்டினார்கள். இப்போது எங்கு திரும்பினாலும் கொரோனா எனும் வார்த்தையே பயத்துடன் எதிரொலிக்கின்றன. டி.வி.க்களிலும் நிமிடத்துக்கு ஒருமுறை கொரோனா எனும் வார்த்தை இடம்பெறுகிறது. இதனால் ‘கொரோனா என்றால் என்னம்மா?‘ என்று குழந்தைகள் கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

    இதையடுத்து குழந்தைகளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று குழம்பும் பெற்றோர் ஒருவழியாக, ‘கொரோனா ஒரு பூதம். வெளியே போய் விளையாடினா புடிச்சிட்டு போயிடும்’, என்று பயமுறுத்தி விடுகிறார்கள். மேலும் ‘பூதம் வராம இருக்கணும்னா அடிக்கடி இந்த மருந்த (சானிடைசர்) ஊத்தி கை கழுவனும்‘, என்றும் சொல்லி கொடுக்கிறார்கள். இதனால் கொரோனா என்பது பூதம் என்று குழந்தைகள் அடிமனதில் ஆழமாக விதைக்கப்படுகிறது.

    இதனால் துள்ளி திரிய வேண்டிய காலத்திலும் கொரோனா பயம் காரணமாக சுட்டி குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே அடிக்கடி சானிடைசர் ஊற்றியோ, சோப்பு போட்டோ கைகளை நன்றாக கழுவி கொள்கிறார்கள். இதனால் டி.வி.க்களே கதியென வீட்டுக்குள்ளேயே இருந்து விடுகிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் வெளியே செல்வதை காட்டிலும், வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு என்பதால் பெற்றோர் இந்த நடைமுறையை கையாண்டு வருகிறார்கள்.

    என்னதான் டி.வி.க்களில் நிகழ்ச்சிகள், பாடல்கள் என்று பொழுதை கழித்தாலும், வீட்டு வாசலில், தெருக்களில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வதே தனி சுகம்தான். அந்த சுகத்தை மீண்டும் எப்போது அனுபவிப்போம் என்ற ஆசையில் குழந்தைகளும் இருப்பதை மறுக்க முடியாது. காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
    Next Story
    ×