search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    X

    தேரோட்டம் நடந்ததையும் அதில் கலந்துகொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    • கோவில்விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மம் நடந்தது.
    • அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் சுருள் வைத்து வழிபட்டனர்.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டிகள், அய்யாவின் ஆன்மிக கச்சேரி, அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு அருள் பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ம் திருவிழாவான நேற்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 1 மணிக்கு பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு யானை முன்னே செல்ல மயிலாட்டம், கோலாட்டம், சிங்காரி மேளம், நாதஸ்வரத்துடன் ஆஞ்சநேயர் தேர் முன்னே செல்ல செம்பவள பஞ்சவர்ண தேர் வீதிஉலா வந்தது. அய்யாவின் அன்பு கொடிமக்கள் காவி உடை அணிந்து, முத்துக்கொடை ஏந்தி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது, வழிநெடுகிலும் மோர் தர்மம், பழ தர்மம், இனிப்பு தர்மங்கள், கோவில்விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மம் நடந்தது. மேலும், அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் சுருள் வைத்து வழிபட்டனர். தேரானது கோவிலில் இருந்து புறப்பட்டு மேலஉடையப்பன்குடியிருப்பு வழியாக கோவில்விளை சந்திப்பு வந்து பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அன்னதர்மம், வாணவேடிக்கை, நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 1 மணிக்கு அய்யாவின் வாகனப்பவனி, 2 மணிக்கு கொடியிறக்கம், இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சுசீந்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×