search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை தைப்பூசம்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

    • நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூசம் நடக்கிறது.

    விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது. 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நேற்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த நாள். இதை முன்னிட்டு நேற்றும் இன்றும் திருக்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா நடைபெற்றது.

    Next Story
    ×