search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நாளை தொடக்கம்
    X

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நாளை தொடக்கம்

    • ஆடி கிருத்திகை திருவிழா நாளை தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நாளை (21ந்தேதி) தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடக்கிறது.

    விழா நாளை காலை அஸ்வினியுடன் தொடங்குகிறது. மறுநாள் (22-ந்தேதி) ஆடி பரணி, 23-ந்தேதி ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு முதல்நாள் தெப்ப விழா நடத்தப்படுகிறது. 24-ந்தேதி 2-ம் நாள் தெப்பமும் 25-ந்தேதி 3-ம் நாள் தெப்பமும் நடக்கிறது.

    ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    பக்தர்கள் தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை-திருப்பதி சாலை, அரக்கோணம்-திருத்தணி சாலை, சித்தூர்-திருத்தணி சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்பார்வையில் திருத்தணி கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் தரிசனத்துக்காக ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும். 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×