search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பகலிலும், பவுர்ணமி ஒளியிலும் கோலாகலமாக நடந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் தெப்ப உற்சவம்
    X

    பகலிலும், பவுர்ணமி ஒளியிலும் கோலாகலமாக நடந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் தெப்ப உற்சவம்

    • சுவாமி-அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலை, இரவில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலை மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர்-பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர். அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, சுவாமி சன்னதி தெரு, முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் எதிரே உள்ள முக்தீசுவரர் கோவிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    அதை தொடர்ந்து சுவாமி-அம்மன் தெப்பக்குளத்துக்கு சென்று, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்கள். சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

    இதற்கிடையே மீனாட்சியின் தெப்ப உற்சவத்தை காண தெப்பக்குள கரையில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.

    பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பகல் 11.10 மணிக்கு தெப்பம் வலம் வர தொடங்கியது. பக்தி கோஷங்கள் எதிரொலித்தன.

    தெப்பக்குளத்தை 2 முறை பகலில் தெப்பம் வலம் வந்த பிறகு சுவாமியும், அம்மனும் தெப்பக்குள மைய மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து இரவு மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு தை மாத பவுணர்மி நிலவு வெளிச்சத்திலும், மின்னொளியிலும் ஜொலித்த தெப்பத்தை இரவு 7.40 மணிக்கு மேல் பக்தர்கள் பக்தி கோஷத்துடன் இழுத்தனர். இரவில் 3-வது சுற்றாக தெப்பம் குளத்தை வலம் வந்தது. அப்போதும் ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.

    பின்னர் மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் தங்கக்குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தெப்பக்குளத்தில் இருந்து சுவாமி-அம்மன் புறப்பாடாகி, காமராஜர்சாலை, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலை அடைந்தனர்.

    தெப்ப உற்சவத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள், போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல கமிஷனர் செல்லத்துரை, மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×