என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீனிவாசமங்காபுரம் கோவிலில் நடந்த மகா சாந்தி வருண யாகம் நிறைவு
    X

    சீனிவாசமங்காபுரம் கோவிலில் நடந்த மகா சாந்தி வருண யாகம் நிறைவு

    • வருண பகவானை மகிழ்விக்க மூன்று நாட்கள் மகா சாந்தி வருண யாகம்.
    • ருத்விக்குகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் அஷ்டோத்தர சத குண்டத்மக மகா சாந்தி வருண யாகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கோபூஜை செய்து, பசுக்களுக்கு வெல்லம், பச்சரிசி, பழம் ஆகியவற்றை வழங்கினர். அதன் பிறகு இருவரும் மகா பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அப்போது அறங்காவலர் குழு தலைவர் நிருபர்களிடம் பேசுகையில், வருண பகவானை மகிழ்விக்க மூன்று நாட்கள் அஷ்டோத்தர சத குண்டத்மக மகா சாந்தி வருண யாகம் நடந்தது. இந்த யாகத்தை மூன்று மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ருத்விக்குகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடத்தினர். இதன் மூலம் போதிய மழைப் பெய்து நாடும், மாநிலமும் செழிக்க வேண்டும், என்றார்.

    யாக நிகழ்ச்சியில் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சிதலு, அனைத்துத் திட்ட அலுவலர் ராஜகோபால், இந்து தர்ம பிரசார பரிஷத் செயலாளர் சீனிவாசலு, உதவி அதிகாரி கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×