search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
    X

    திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    • இன்று சுவாமி அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வாகனங்களிலும் வந்து அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் அங்கபிரதட்சனை செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பிறகு உச்சி கால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனை நடைபெற்றது.

    இன்று மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று நடை திருக்காப்பிடப்படும்.

    இதுதவிர மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் வருடம் முழுவதும் சிறப்பான வாழ்வு அமையும் என்ற நம்பிக்கை உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையிலே கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், டி.எஸ்.பி. ஆவுடையப்பன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×