search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    • வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
    • சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு பஞ்சாங்கம் முறைப்படி தவறான தகவல்களை பரப்பி வருவதால், பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த பக்தர்களுக்கு குழப்பம் தீர்ந்தது.

    Next Story
    ×