என் மலர்
வழிபாடு

கோவில் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடங்குகிறது
- மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
- வருகிற 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு.
பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று இரவு (22-ந்தேதி) தொடங்குகிறது. நாளை (23-ந்தேதி) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.
காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங் காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான ஜனவரி 1-ந்தேதி, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
அன்று நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருகிறார். பின்னர் திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சேருகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
மறுநாள் (2-ந்தேதி) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருகிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் திறப்பு தினமான 2-ந்தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழித்திருநாள் தொடங்குகிறது.
அதன் பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் அனைத்து கோபுரங்கள் மற்றும் வீதிகளில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, இணை ஆணையர் சீ.செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






