search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இன்று நடக்கிறது
    X

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இன்று நடக்கிறது

    • இன்று மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • 20-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து சொர்க்கவாசலை கடந்து தாயார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்கிறார். இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. பின்னர் இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். தொடர்ந்து 21-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து உற்சவம் நடைபெறும்.

    அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

    வருகிற 21-ந் தேதியன்று இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணிவரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    Next Story
    ×