search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
    X

    பக்தர்கள், கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கூடைகளில் பூக்களை சுமந்து வந்த காட்சி.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    • மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.
    • நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர்.

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் பூச்சொரிதல் விழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக தொடங்கியது.

    மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறும்.

    விழாவையொட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீதும், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கூடைகளிலும் தலையிலும் பூக்களை சுமந்தும், கையில் ஏந்தியும் வந்து அம்மனுக்கு சாத்தினர்.

    இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு இன்று இரவு முதல் நாளை (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை பூக்களை கொண்டு வருவார்கள்.

    சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோவிலின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டு உள்ளதால் இந்தகோவிலி லும் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவரை போன்ற சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

    அம்மனின் சுயம்புதிருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும்.

    மேலும், இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதற்கு திருக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்று கள் உள்ளது. தட்சன் யாகத் துக்குச்சென்ற தாட்சாய ணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தது.

    இதனால் இந்தத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பதுவேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.

    மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினை களும் அணுகாது, சகல சவு பாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடம்தோ றும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்பு ஆகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று இரவு முதலே பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×