search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

    • இன்று கோனியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
    • நாளை தெப்பத் திருவிழா நடக்கிறது.

    கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மாத தேர்த்திருவிழா கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தேர் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

    பின்னர் கடந்த 14-ந் தேதி பூச்சாட்டு, 20-ந் தேதி கிராம சாந்தியும் நடந்தது. 21-ந் தேதி தேர்த்திருவிழா கொடியேற்றம், அக்னிசாட்டு ஆகியவை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து 22-ந் தேதி புலிவாகனத்தில் அம்மன் வீதி உலா, 23-ந் தேதி கிளி வாகனத்திலும், 24-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஓதுவார் கண்ணப்பனின் திருமுறை பாராயணத்தோடு பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் உற்சவர் அதிகாலை நேரத்தில் பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார். அப்போது சுற்றியிருந்த பக்தர்கள் அம்மனை இருகரம் கூப்பி வழிபட்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதியில் தேர் முன்பு நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் செல்வம்பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தேர்நிலைத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் ஆடி அசைந்து ராஜவீதியில் இருந்து ஒப்பணக்கார வீதியை நோக்கி வந்தது. தேரின் முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக தேரின் இருபுறமும் நீண்ட கயிற்றை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

    தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக வந்து மாலையில் தேர்நிலைத்திடலை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி இந்து அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர், உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்தை ஒழங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதுதவிர மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) கோனியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    இதனை தொடர்ந்து 4-ந்தேதி கொடியிறக்கமும், 5-ந்தேதி வசந்த விழாவுடன் மாசி தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×