search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் ஜனவரி 26-ந்தேதி கும்பாபிஷேகம்
    X

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் ஜனவரி 26-ந்தேதி கும்பாபிஷேகம்

    • ரூ.68 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்மாள் கோவிலில் ரூ.68 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மேல்சாந்தியிடம் கோவிலின் நிறை, குறைகளை கேட்டறிந்தார். கோவில் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக கிடைக்கிறதா எனவும் கேட்டறிந்தார்.

    மேலும் அம்பாள் தேர், சாமி தேர்களை பார்வையிட்டு பழுது ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அமைச்சரிடம், தேர் நிலை நிறுத்தும் பகுதியை மழைநீர் தேங்காதவாறு உயர்த்த வேண்டும். பெரிய தேருக்கு கண்ணாடி இழை கூடாரம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குமரி மாவட்ட அறநிலையத்துறையில் ரூ.15 கோடி மீதம் இருப்பதாகவும், அந்த ரூபாயை வைத்து உடனடியாக அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவிலில் சாமி மற்றும் சிவகாமி அம்மன் சன்னதிகள், விமானங்கள், கொடிமர மண்டபம், அர்த்த மண்டபம், நமஸ்கார மண்டபம் போன்றவற்றை பழுது பார்த்தல், மின் இணைப்புகளை சரிசெய்தல், மேலவாசல் கோபுர திருப்பணிகள், சாமி உலா வரும் வாகனங்களை செப்பனிடுதல், மதிற்சுவரை சீரமைத்தல், முகப்பில் நிழற்கூடம் அமைத்தல், கோவிலுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நிர்வாகத்தின் மூலமும் உபயதாரர்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான உதவிகளை செய்திடவும் தயாராக உள்ளோம். இந்த பணிகள் நிறைவுற்ற பிறகு வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், குமரி மாவட்ட இணைக்கப்பட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் நகைகள் பாதுகாப்பு அலுவலர் பாரதி மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×