என் மலர்
வழிபாடு

அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.
இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகக் கருதப்படுவது திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.






