search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்
    X

    ஆடி அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்

    • 23-ந்தேதி சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 4-வது நாளான இன்று காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனிடையே ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் 5-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையான நாளை காலை 11 மணிக்கு கோவிலிலிருந்து ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. காலை 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து காலபூஜை நடைபெறும்.

    வழக்கமாக பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் நாளை ஆடி அமாவாசையாக இருப்பதால் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு அடைக்கப்படாமல் பகல் முழுவதும் திறந்து இருக்கும். இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவின் 7-வது திருநாள் நிகழ்ச்சியாக வருகின்ற 19-ந்தேதி அன்று இரவு வெள்ளி தேரோட்டமும் 9-வது திருநாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 11-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் 12-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    Next Story
    ×