search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்களை படத்தில் காணலாம்.

    கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்

    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. பவானி மட்டுமின்றி 18 பட்டி கிராம மக்களுக்கும் அதிதேவதையாக இருக்கும் செல்லியாண்டியம்மன் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் வகையறா கோவில்களின் திருவிழா கடந்த பிப்ரவரி 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. 23-ந் தேதி கொடிஏற்று விழா நடந்தது.

    நேற்று செல்லியாண்டியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான சேறு பூசும் விழா நடந்தது. காலை 10 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பவானி நகரின் எல்லையில் உள்ள எல்லைமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. குதிரை துளுக்கி அனுமதி அளித்ததும் எல்லையம்மன் கோவிலில் இருந்து படைக்கல ஊர்வலம் தொடங்கியது. முத்துக்குடை, குதிரையுடன் பூசாரி படைக்கலத்தை சுமந்து வர பக்தர்கள் செல்லியாண்டியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

    ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் எல்லைமாரியம்மன் கோவில் அருகே தண்ணீரில் நனைந்த சேற்றினை எடுத்து உடலில் பூசிக்கொண்டனர். இதுபோல் பக்தர்கள் பலரும் பல வண்ண சாயப்பொடிகளை உடலில் பூசிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பவானி காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் உடலில் காய்கறிகளால் ஆன மாலைகளை அணிந்து அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    சிவபெருமான், அம்மன், பத்ரகாளி, துர்க்கை அம்மன் வேடங்களிலும் பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் பலர் அலுமினிய நிறத்தில் உடலில் பெயிண்ட் பூசி வந்தனர்.

    ஊர்வலம் வந்த பாதை நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்து வழிபாடுகள் செய்தனர். மேலும் காய்கறிகள், உணவுப்பொருட்கள், உப்பு-மிளகு, புத்தாடைகளை வீசி நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
    Next Story
    ×