என் மலர்

    வழிபாடு

    சிவாலய ஓட்டம்
    X
    சிவாலய ஓட்டம்

    குமரியில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 28-ந் தேதி தொடங்குகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 28-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
    குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் இங்குள்ள 12 சிவாலயங்களை ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் ஆன்மிகம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும்.

    இதில் பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் ஆகிய 12 சிவாலயங்களில் ஓடி சென்று வழிபடுவார்கள். இதில் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை பக்தர்கள் சுற்றி வருவார்கள்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். இவர்கள் காலை, மாலை வேளைகளில் புனித நீராடி சிவன் கோவில்களுக்கு சென்று சிவநாமங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்து சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கின்றனர்.

    பின்னர், சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து கையில் விசிறியுடன் ‘கோபாலா... கோவிந்தா...’ என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி ஒவ்வொரு கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்பு சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் ஓட்டமாகவே சென்றனர். தற்போது பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்கின்றனர்.

    இந்த ஆண்டு மகா சிவராத்தி வருகிற 1-ந் தேதி வருகிறது. இதையொட்டி சிவால ஓட்டம் 28-ந் தேதி தொடங்குகிறது. அன்று முன்சிறை மகா தேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் இரவு முழுவதும் ஓட்டமும் நடையுமாக சென்று சிவாலங்களை தரிசனம் செய்துவிட்டு 1-ந் தேதி நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் ஓட்டத்தை முடித்து கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் கோவிலில் இருந்து வழிபாடு செய்துவிட்டு 2-ந் தேதி காலையில் தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

    சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் மார்ச் 1-ந் தேதி காலையில் தொடங்கி 2-ந் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.

    பக்தர்களுக்கு வழிநெடுகிலும் இளைப்பாறுவதற்கான வசதியும், மோர், சுக்குநீர் மற்றும் கஞ்சி, பாயாசத்துடன் சாதம் உள்ளிட்ட உணவுகளும் பொதுமக்களால் இலவசமாக வழங்கப்படும்.
    Next Story
    ×