
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று நள்ளிரவில் நடந்தது. இதையொட்டி, நள்ளிரவு 12.30 மணிக்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் உட்பட பல அருளாளிகள் அம்மன் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு சென்றனர்.
அங்கு எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயனகோலத்தில் அமைக்கப்பட்டது. அருளாளி ஆற்றில் நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்து வந்தார். அதிகாலை 2.30 மணிக்கு பம்பை மேளதாங்கள் முழங்க அம்மனின் திரு உருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டு, அம்மன் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
எலுமிச்சை மாலைகளால் அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின் பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர். அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்பு துண்டை வாயில் கவ்விக்கொண்டு கையில் சூலாயுத்துடன் ஆவேசமாக ஆடினார். ஆடிக்கொண்டே அம்மன் உருவத்தையும் சிதைத்தார்.
அப்போது, அம்மனின் கழுத்துப்பகுதியில் இருந்து பிடி மண் எடுக்கப்பட்டது. மயான பூஜை அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைந்தது. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பலர் அருள் வந்து ஆடினர். இன்று காலை ஆழியாற்றங்கரையில் கோவில் தலைமை குருக்கள் கும்பஸ்தாபனம் செய்தனர். அம்மன் உருவத்தின் கழுத்துப்பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்கப்பட்டு சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்கலாம்....திருப்பதி ஏழுமலையானின் தினசரி சேவைகள்