
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும், தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சித்திரை பெருவிழா கொண்டாடப்படவில்லை. இதையடுத்து தேரோட்டம் நடைபெறவில்லை.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா அடுத்த மாதம், (மார்ச்) 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல், 16-ந் தேதி வரை 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 12-ந் தேதியும், தேரோட்டம் ஏப்ரல் 13-ந் தேதியும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் நேற்று நடை பெற்றது. இதையொட்டி, பால், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யட்ட, பந்தல்க்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், அறநிலையத் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.