search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.
    X
    நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம்நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம்நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்பத்திருவிழாவின் 4-ம்நாளான நேற்று மாலை நம்பெருமாள் வெள்ளி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாசம் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருவிழாவின் 5-ம் நாளான 8-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 10-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8ம் நாளான 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 12-ந்தேதி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 8 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
    Next Story
    ×