
அதன்படி தை அமாவாசை நாளான வருகிற 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து 18 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
ஆனைமலை ஆழியாற்றங் கரையில் உள்ள மயானத்தில் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. மறுநாள் 17-ந்தேதி காலை 9.30 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
18-ந்தேதி காலை 9 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 19-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றனர்.