search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
    X
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தைத்திருவிழா 7-ந்தேதி தொடங்குகிறது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தைத்திருவிழா வருகிற 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் 18-ந் தேதி நடக்கிறது.
    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா வருகிற 7-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் கும்ப லக்கனத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடக்கிறது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்கள்.

    அப்போது கொடிமரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்படும். விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் வருகிற 12-ந் தேதி சைவ சமய வரலாற்று லீலையும், 14-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது.

    தெப்பத்திருவிழாவுக்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து 17-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா காமராஜர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

    அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10.40 மணி முதல் 11.04 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி-அம்மன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதன்பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலும் எழுந்தருளி மீண்டும் கோவிலுக்கு புறப்படுவார்கள்.

    அன்றைய தினம் சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்துவருகிறார்கள்.
    Next Story
    ×