search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பசாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் இருமுடி கட்டுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    ஐயப்பசாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் இருமுடி கட்டுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பேருக்கு அனுமதி

    சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூடாரங்கள் அமைத்தும் பக்தர்கள் தங்கலாம் என கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

    சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 300 வாடகை அறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மேலும் 200 அறைகள் தயாராகி வருகிறது. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

    அதே போல் பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவும் அனுமதி அளிக்கப்படும். தற்போது பம்பையில் இருந்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகிறார்கள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நீலிமலை வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் ஜனீஷ்குமார், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×