search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் பாதை தகரத்தால் மூடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் பாதை தகரத்தால் மூடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    சர்வ அமாவாசையான இன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை

    கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக இன்று (6-ந்தேதி) தேவிபட்டினம், நவபா‌ஷண கோவில், சேதுக்கரை, மாரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சர்வ அமாவாசையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட மற்றும் கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்ய கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு பக்தர்கள் செல்லும் சன்னதி தெரு, மண்டிதெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து பாதைகளும் தடுப்பு கம்பி மற்றும் இரும்பு தகரத்தால் நேற்று நகராட்சி மூலம் அடைக்கப்பட்டன. அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் பாதை நேற்று மூடப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோல் தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதி செல்லும் சாலை தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டது.

    அதேபோல் இன்று (6-ந்தேதி) அமாவாசை தினத்தன்று தேவிபட்டினம், நவபா‌ஷண கோவில், சேதுக்கரை, மாரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடலில் குளிக்கவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை.

    Next Story
    ×