என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில்
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதி

    சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என்றும் சாமிகளுக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் தொடரும் என்றும் இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடை சாத்தப்பட்டது. இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த வாரம் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கியது.

    இதற்கிடையே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி தளர்வுகள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இதில் கோவில்களிலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும் என்றும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை இன்று (திங்கட் கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி கோவில் கொடிமரம் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வளாகம், பக்தர்கள் தங்கும் மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

    மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்படும் என்றும், முககவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோவிலுக்குள் சென்று அம்மனை வழக்கம் போல் காலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
    Next Story
    ×