என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் சன்னதி மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் சன்னதி மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வைகாசி விசாகத்தன்று ராமேசுவரம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்

    கடந்த ஆண்டும் கொரோனா முழு ஊரடங்கால் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாததுடன் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 26-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன்படி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த ஒரு மாதமாகவே பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அன்று தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏராளமான பக்தர்கள் பல விதமான காவடிகள் எடுத்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் வைகாசி விசாகம் நாளான நேற்று முழுஊரடங்கு அமலில் உள்ளதாலும், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையாலும் ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் கோவில் நேற்று திறக்கப்படவில்லை. நேற்று உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் மேலவாசல் முருகன் சன்னதி வாசல் முன்பு நின்று முருகனை தரிசனம் செய்தும், சூடன் ஏற்றியும் வழிபாடு நடத்தி விட்டு சென்றனர். முருகன் கோவில் முன்பு பக்தர்கள் கூடுவதை தடுப்பதற்காக அங்கு போலீசார் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தரிசனம் செய்த பக்தர்கள் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.

    கடந்த ஆண்டும் கொரோனா முழு ஊரடங்கால் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாததுடன் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஆண்டாக வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் போனதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
    Next Story
    ×