search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர்
    X
    கள்ளழகர்

    கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது

    மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது, அப்போது கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது.

    தொடர்ந்து மாலையில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் மேள தாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி சென்று அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. முன்னதாக மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது பத்தர்கள் யாரும் உள்ளே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.

    ஆனால் அரசு வழிகாட்டுதலின்படி கோவிலுக்குள் சென்றும், வெளி பிரகாரத்தில் சுவாமி புறப்பாடகி வரும் போதும் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்றும், நாளையும் வழக்கம் போல் சுவாமி புறப்பாடு நடைபெறும். 3 நாட்களும் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    மேலும் 26-ந்தேதி காலை 10 மணிக்கு எதிர் சேவை, கள்ளழகர் திருக்கோலம் நிகழ்ச்சியும், 27-ந்தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும், சுவாமிக்கு ஆண்டாள் மாலை சாற்றுதல் நிகழ்வும், தொடர்ந்து குதிரை வாகனத்தில் ஆடி வீதியில் புறப்பாடும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம், தொடர்ந்து 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, 29-ந்தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், 30-ந்தேதி காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு மே 1-ந் தேதி காலை 10 மணிக்கு அர்த்த மண்டப சேவை, 2-ந் தேதி உற்சவ சாந்தி, திருமஞ்சனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதில் வருகிற 30-ந்தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாளுக்குரிய சிறப்பு அலங்காரத்தில் இருக்கும் கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×