search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் நிரூபித்து, புத்தகமாக வெளியிட்ட காட்சி.
    X
    ஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் நிரூபித்து, புத்தகமாக வெளியிட்ட காட்சி.

    திருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார்: திருப்பதி தேவஸ்தானம் ஆதாரம் வெளியீடு

    திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளது.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும், என தேவஸ்தானம் முன்கூட்டியே அறிவித்தது. அதன்படி நேற்று திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.

    அதன் புத்தக பிரதியை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி வெளியிட, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ெபற்றுக் கொண்டார்.

    அப்போது பன்வாரிலால் புரோகித் கூறியதாவது:-

    ஆஞ்சநேயரின் பிறப்பிடமாக அஞ்சனாத்ரி இருந்தது என்பதை புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபிக்கிறது. இதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை ராம நவமி தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ராமரின் பிறப்பிடம் அயோத்தி ஆகும். அவரின் பக்தனான அனுமனின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்ரி ஆகும். ஆஞ்சநேயரின் பிறப்பிடத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. நான், அனுமனின் பக்தன். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    அறிஞர்கள் குழு அனுமனின் பிறப்பிடத்தை ஆழமாக ஆய்வு செய்துள்ளது. அனுமனின் ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து, சேகரிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு அறிவேன். அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி கூறியதாவது:-

    அனுமனின் பிறப்பிடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி என்பது ராமநவமியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள் குழு புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் சான்றுகளை சேகரித்து உறுதிப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஊடகங்களுக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மிக விரைவில் புத்தக வடிவில் கொண்டு வரப்படும்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஹம்பி ஷேத்திரம் அனுமனின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது, மேலும் கிஷ்கிந்தா என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு அனுமன் ஒரு ராஜ்யத்தை நடத்தியிருக்கலாம் என்றும், அனுமன் அஞ்சனாத்ரி மலையில் இருந்து அங்குச் சென்று சுக்ரீவனுக்கு உதவியிருக்கலாம் என்றும் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது.

    ஆஞ்சநேயர்

    குஜராத், மராட்டிம், அரியானா ஆகிய மாநிலங்களில் அனுமன் பிறந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆந்திர மாநில அரசு ஆலோசனையின்பேரில் அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரியில் ஒரு கோவில் கட்டப்படும்.

    எஸ்.வி. வேதப் பல்கலைக்கழக துணை வேந்தரும் பேராசிரியருமான சன்னிதானம் சுதர்சனசர்மா, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தரும் பேராசிரியருமான முரளிதர சர்மா, பேராசிரியர்கள் ராணி சதாசிவமூர்த்தி, ஜனமதி ராமகிருஷ்ணா ஆச்சாரியார், சங்கரநாராயணா, இஸ்ரோ விஞ்ஞானி குமார், முன்னாள் துணை இயக்குனர், ஒருங்கிணைப்பாளரும், எஸ்.வி. பல்கலைக்கழக உயர் இறையியல் துறை திட்ட அலுவலருமான டாக்டர் அகில்லெஸ் விபீஷன் சர்மா ஆகியோருக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-

    அறிஞர்கள் குழு 4 மாதங்களாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. வலுவான ஆதாரங்களை சேகரித்தது. கொரோனா ஆஞ்சநேயரின் பிறப்பிடம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வருமாறு ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து, ஒரு ஆண்டுக்கு முன்பு யோக வாசிஸ்தம் மற்றும் சுந்தரகாண்டம் ஓதத் தொடங்கினோம்.

    திருமலையில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து கொண்டிருப்பதால் அனுமனின் பிறப்பிடம் ஆதாரங்களுடன் தற்போது நிரூபிக்கப்படுவது ஏழுமலையானின் அருள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதாரா சர்மா கூறியதாவது:-

    சீதாதேவியிடம் அனுமன் கூறினார்

    அனுமனின் பிறப்பு கதை ஸ்ரீமத் ராமாயணத்தின் சுந்தரகாண்டத்திலும், பல புராணங்களிலும், வெங்கடச்சால மகாத் மியத்திலும், பல இலக்கியங்களிலும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. சுந்தரகாண்டத்தில் அனுமனே தனது பிறந்த கதையை சீதாதேவியிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. அனுமான், அஞ்சனாதேவியிடம் தான் வாயுபகவானால் பிறந்தவன், என்று கூறினார்.

    மதங்க மகரிஷியின் கூற்றுப்படி, அஞ்சனாதேவி தவம் செய்ய வெங்கடாச்சலத்துக்குச் சென்றார், அஞ்சநேயசாமியைப் பெற்றெடுத்தார், எனவே மலைக்கு ‘அஞ்சனாத்ரி' என்ற பெயர் ஏற்பட்டது.

    கம்ப ராமாயணம், வேதாந்த தேசிகன், தாளப்பாக்கம் அண்ணாமாச்சார்யா ஆகியோரால் வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ட்டன் என்ற அதிகாரி கி.பி. 1800-ம் ஆண்டில் திருமலை பற்றிய தகவல்களை தொகுத்து, சவால்-இ-ஜவாப் என்ற புத்தகத்தை எழுதினார். அதில் அஞ்சனாத்ரி என்ற வார்த்தையை அஞ்சனாதேவி, ஆஞ்சநேயர் பிறப்பிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து, திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கல்வெட்டு 1491-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதியும், 2-வது கல்வெட்டு 1545-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதியும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் இதைக் குறிப்பிடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×