search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    களபாபிஷேக ஊர்வலம், 18-ம் படியில் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்தபடம்.
    X
    களபாபிஷேக ஊர்வலம், 18-ம் படியில் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. நிறைவு நாளான நேற்று சிறப்பு வழிபாடு முடிந்த பிறகு இரவு நடை அடைக்கப்பட்டது.
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி கடந்த 10-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். மறுநாள் முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயா ஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை, களபாபிஷேக ஊர்வலம் போன்றவை நடைபெற்று வந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    14-ந் தேதி விஷூ பண்டிகை அன்று சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெற்றது. அப்போது, பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வழங்கினர்.

    கடந்த 8 நாட்கள் நடைபெற்று வந்த சிறப்பு பூஜைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. நேற்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் கியூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் சாமி தரிசனம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
    Next Story
    ×