என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொங்கல் விழா தொடங்கியதையொட்டி அம்மன் தரிசனம் நடத்திய பக்தர்களை படத்தில் காணலாம்
    X
    பொங்கல் விழா தொடங்கியதையொட்டி அம்மன் தரிசனம் நடத்திய பக்தர்களை படத்தில் காணலாம்

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது

    திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி 27-ந் தேதி நடக்கிறது.
    பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று அம்மனுக்கு காப்பு கட்டு சடங்குடன் தொடங்கியது. காலை 9.45 மணிக்கு மேல் சாந்தி பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் நம்பூதிரி காப்பு கட்டி விழாவை தொடங்கி வைத்தார்.

    மாலை 6 மணிக்கு அம்பா கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை நடிகர் நெடுமுடி வேணு தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு 2021-ம் ஆண்டுக்கான ஆற்றுக்கால் அம்பா விருது கோவில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த விழா 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம் காலை 6 மணிக்கு தீபாராதனை, 6.40 மணிக்கு உஷ பூஜை, 7.15 மணிக்கு களபாபிஷேகம், 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 11.30 மணிக்கு உச்ச பூஜை, மதியம் 1 மணிக்கு நடை அடைப்பு, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.45 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு அத்தாள பூஜை, இரவு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    விழாவின் சிகரமான பொங்கல் வழிபாடு 27-ந் தேதி காலை 10.50 மணிக்கு நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கல் படைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொது இடங்கள், வழிகளில் பொங்கல் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு பணிகளுக்கு 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடை உத்தரவுகளை பக்தர்கள் முறையாக கடைபிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×