search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்ப திருவிழா தொடங்கியது
    X
    மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்ப திருவிழா தொடங்கியது

    மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்ப திருவிழா தொடங்கியது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கொடிமரத்திற்கும், சாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 10.40 மணிக்கு மேல் 11.04 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. அங்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சாமியும் எழுந்தருளினார்.

    அப்போது கொடிமரத்திற்கும், சாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இரு வேளையும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் வருகிற 23-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 24-ந் தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது.

    தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 27-ந்தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா காமராஜர் சாலையில் உள்ள தெப்பத்தில் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமி அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியும், அம்மனும் காலை 10.35 மணி முதல் 11.59 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதன்பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோவிலுக்கு புறப்படுவார்கள். அன்றைய தினம் சாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை அன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×