search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி
    X
    பழனி

    பழனியில் தைப்பூச தேரோட்டத்தில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    பழனியில் தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.
    திண்டுக்கல் :

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு் தைப்பூச திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவை வருமாறு:-

    கொரோனா காலத்தில், திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக அரசு அறிவித்தபடி நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டும்.

    மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் பஜனைக்குழு, பக்தி இசைக்குழுவை சேர்ந்தவர்களை பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது. மாறாக சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலிக்க விடலாம்.

    மலைக்கோவிலில் மூலவருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும் போது பக்தர்களை (உபயதாரர்கள் உள்பட) சன்னதியில் அமர்ந்து பார்வையிட அனுமதிக்க கூடாது. பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் வழியிலும், மலைக்கோவிலுக்கு செல்லும் வழியிலும் சித்த மருத்துவ சிகிச்சை முகாம்களை அமைத்து பக்தர்களுக்கு பரிசோதனை நடத்த வேண்டும். பார்சல் முறையில் பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே வருகிற 28-ந்தேதி நடைபெறும். அப்போது தேரோட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதியில்லை.

    தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் 5 ஆயிரம் பேர் மலைக்கோவிலில் ஒரு இரவு தங்குவது வழக்கம். தற்போது 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம்.

    தேரோட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

    தைப்பூச திருவிழா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். எனவே வருகிற 14-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
    Next Story
    ×