search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குபேரர் கிரிவலம்
    X
    குபேரர் கிரிவலம்

    13-ந்தேதி குபேரர் கிரிவலம்: கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம்

    திருவண்ணாமலையில் 13-ந்தேதி குபேரர் கிரிவலத்தன்று பக்தர்கள், பொதுமக்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் நகரில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன.

    இதில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கத்தை கார்த்திகை மாத சிவராத்திரி அன்று குபேரர் வணங்கிய பின் கிரிவலம் வருவதாகவும், அந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகை மாத சிவராத்திரி அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த ஆண்டு 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷம் வருகிறது. அன்று குபேரர் கிரிவலம் வருவதற்கு உகந்த நாள் என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு தற்போது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் 13-ந்தேதி குபேரர் கிரிவலத்தன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் அன்றைய தினம் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் மூலமாக குபேர லிங்கம் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×