search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்ட போது எடுத்த படம்.
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்ட போது எடுத்த படம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது இந்த கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும், வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    நேற்று தை அமாவாசையையொட்டி காலை 5 மணியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கட்டண தரிசன வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் விளக்கு ஏற்றி தேங்காய் உடைத்தும் ஏராளமான பெண்கள் வழிபட்டனர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து அம்மனை தரிசித்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. லால்குடி போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில், போலீ சாரும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருச்சியில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள், வேன்கள் போன்ற வாகனங்கள் புதிய பஸ் நிலையம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதே போல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. 
    Next Story
    ×