search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 8-ந்தேதி தொடங்குகிறது
    X

    வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 8-ந்தேதி தொடங்குகிறது

    பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுள் ஒன்றான வயலூர் முருகன் கோவிலில் வருகிற 8-ந்தேதி (வியாழக் கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை நடை பெறுகிறது.
    பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 8-ந் தேதி (வியாழக் கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை நடை பெறுகிறது.

    விழாவின் முதல் நாளன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அபிஷேகமும், அதனையடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ரக்‌ஷா பந்தனமும், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

    9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணி அளவில் சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வருகிறார். அதனையடுத்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. அன்றைய நாட்களில் இரவு 8 மணிக்கு முறையே சிங்காரவேலர் சேஷ, அன்னம், வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    11-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.45 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளுகிறார்.

    14-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராணி ஆலோசனையின்பேரில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×