search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா
    X

    144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா

    புஷ்கரத் திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும்.
    புஷ்கரத் திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும்.

    மூன்றரைக்கோடி தீர்த்தத்துக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்து தங்கி இருப்பதாக ஐதீகம்.

    12 வருடத்திற்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடைபெறும். இதை காவிரி புஷ்கரம் என்பர்.

    ஒரு நதியில் நடைபெறும் இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்போது அதனை மகாபுஷ்கரம் என்று அழைப்பர்.

    புஷ்கரத்துக்கும், குருப்பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. இதுகுறித்து புராணம் கூறும் தகவல்:-

    புஷ்கரம் என்பவர் ஒரு முனிவர். இவர் வருண பகவானின் தாய்மாமன் ஆவார். இவர் ஒருமுறை சிவனை நோக்கி கடும் தவம் இருந்து அவரிடம் இருந்து ஜலமூர்த்தியை (தீர்த்தம்) பெற்றார். இதனால் புஷ்கரம் 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதி ஆனார்.

    பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரம் தங்கி இருக்கிறார். ஒரு சமயம் குருபகவான் பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்தார். அப்போது பிரம்மா குருபகவான் முன்பு தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு குருபகவான் உங்களிடம் உள்ள 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தை தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரம்மாவும் ஒப்புக்கொண்டார். ஆனால் புஷ்கரம் இதற்கு சம்மதிக்க மறுத்து, பிரம்மாவிடம் நான் உங்களிடமே இருப்பேன். என்னை பிரித்து விடாதீர்கள் என்று வேண்டிக்கொண்டார்.

    இதனால் பிரம்மா தர்மசங்கடம் அடைந்தார். கொடுத்த வாக்கை பின்வாங்காமல் பிரம்மா குருபகவானிடமும், புஷ்கரத்திடமும் சமாதானமாக பேசி ஒரு முடிவு எடுத்தார்.

    அதன்படி குருபகவான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிரவேசிக்கிறபோது அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி குருபகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கை நதியிலும், ரிஷபத்தில் நர்மதை, மிதுனத்தில் சரஸ்வதி, கடகத்தில் யமுனை, சிம்மத்தில் கோதாவரி, கன்னியில் கிருஷ்ணா, துலாம் ராசியில் காவிரி, விருச்சிக ராசியில் தாமிரபரணி, தனுசில் சிந்து, மகரத்தில் துங்கபத்ரா, கும்பத்தில் பிரம்மபுத்ரா, மீனத்தில் பரணிதா நதியிலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ராசியிலும் குருபகவான் பிரவேசிக்கிறபோது அந்த ராசிகளுக்குரிய நதிகளில் முதல் 12 நாட்கள் புஷ்கரம் வசிக்க வேண்டும். இந்த 12 நாட்களில் சிவன், பிரம்மா, மகாவிஷ்ணு, பார்வதி, சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் அஷ்டதிக்கு பாலர்கள் வாசம் செய்வார்கள்.

    அப்போது அந்த நதியில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் நீங்கி 3½ கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். அனைத்து கடவுள்களின் அருளாசியும் ஒருங்கே பெறலாம். கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என புராண நூல்கள் கூறுகின்றன.

    குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும் நாள் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவின் தொடக்கத்தை குறிக்கிறது.

    தாமிரபரணி புஷ்கரம் வருகிற 12.10.2018 தொடங்கி தொடர்ச்சியாக 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து 23.10.18 வரை அதாவது 23-ந் தேதி வரை தங்கி இருப்பார்.

    இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, பரணிதா என்ற 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    தற்போது இந்த புஷ்கர விழா தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால் தாமிரபரணி மகாபுஷ்கரம் என்ற பெயரில் வெகு சிறப்பாக தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலையில் இருந்து தாமிரபரணி பாயும் இடங்கள் முதல் திருச்செந்தூருக்கு வடதிசையில் கடலில் சங்கமிக்கும் வரை உள்ள புண்ணிய தீர்த்தக் கட்டங்களில் கொண்டாடப்படுகிறது.

    புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுக்கிரஹோரையில் காஞ்சி சங்கராச்சாரியார், மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள் புனித நீராடி விழாவை தொடங்கிவைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான துறவிகள், பொதுமக்கள் புனித நீராடுகின்றனர்.

    தாமிரபரணி புஷ்கரம் 2018 விழாக்குழு தலைமை அமைப்பாளர் எஸ்.மகாலட்சுமி சுப்ரமணியன் கூறியதாவது:-

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதுபோல தாமிரபரணி நதியை தரிசித்தாலோ, அதை நினைத்தாலோ, ஸ்நானம் செய்தாலோ, அதன் தீர்த்தத்தை பருகினாலோ எல்லா பாவங்களும் அகன்று முக்தி பெறலாம் என்று தாமிரபரணி மகாத்மியம் புகழ்கின்றது.

    இதைவிட இன்னும் உயர்வாக கலியுகத்தின் முடிவில் தாமிரபரணி தீரத்தில் கல்கி என்ற பெயரால் பகவான் விஷ்ணு அவதரிப்பார் என்று பாகவ தாதி புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    இத்தகைய பெருமை வாய்ந்த தாமிரபரணி புஷ்கர திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது. 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு ஹோமங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறுகிறது.

    13-ந் தேதி நவக்கிரக ஹோமம், 14-ந் தேதி துர்கா ஸ்வருப சுயம்வர கலாபார்வதி ஹோமம், 15-ந் தேதி பைரவ ஹோமம், வடுக பூஜை, 16-ந் தேதி மகா சுதர்சன ஹோமம், 17-ந் தேதி புத்ரகாமேஷ்டியாகம், சண்முக ஹோமம், 18-ந் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், வித்யா மகா சரஸ்வதி ஹோமம், 19-ந் தேதி தன்வந்திரி ஹோமம், 20-ந் தேதி குபேர மகாலட்சுமி ஹோமம், 21-ந் தேதி மிருத்யுஞ்ஜய ஹோமம், 22-ந் தேதி ஆயுஷ்ய ஹோமம், 23-ந் தேதி மகா ருத்ர சத சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமங்களின்போது சங்கராச்சாரியார், ஆதினகர்த்தாக்கள், மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனர்.

    12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலையில் சதுர்வேத பாராயணமும், மகாருத்ரஜபம், சண்டிபாராயணம் ஹோமங்கள் நடைபெறும். பிறகு அந்த கலச தீர்த்தங்கள் தினமும் மதியம் 12 மணியளவில் தாமிரபரணியில் சேர்க்கப்பட்டு புஷ்கர நீராடல் நடைபெறும். மாலை தாமிரபரணி ஆரத்தி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, ருதிரக்ரம அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் முதலானவை நடைபெறும்.

    விழாக்காலங்களில் திருநெல்வேலி சுற்றுப்புற கோவில்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவும், ஹோமங்கள் யாகங்கள், வேதம், திருமுறை பாராயணம் ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாலை நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் தாமிரபரணி நதியில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்களை செய்தால் பன்மடங்கு பலனை தரும்.

    இந்த மகா புஷ்கரமானது எல்லா ராசிக்கும் உகந்தது என்றும், இந்த குருப்பெயர்ச்சியின்போது மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. புஷ்கர காலங்களில் தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். பித்ருக்களுக்கு தர்பணம், திதி முதலிய சடங்குகள் செய்து முன்னோர்களை வழிபட்டால் பிதிர்சாபம் நீங்கி வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கப் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×