search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாவலடி கருப்பண்ண சாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
    X

    நாவலடி கருப்பண்ண சாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

    மோகனூர் நாவலடி கருப்பண்ண சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிரசித்தி பெற்ற நாவலடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ராஜகோபுரம், காளியம்மன், மாரியம்மன், அரண்மனை சாவடி விநாயகர், சிவன் கோவில் நுழைவுவாயில் முன் உள்ள விநாயகர் கோவில்கள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 13-ந் தேதி, காளியம்மன், நாவலடியான், மாரியம்மன் கோவிலில் கிராம சாந்தி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து, 14-ந் தேதி கணபதி, நவக்கிரகம், லட்சுமி ஹோமம் நடைபெற்று, மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி நடைபெற்றது. பின்னர் 15-ந் தேதி யானை, குதிரை, ஒட்டகம், பசுக்கள் செண்டைமேளம், கரகாட்டத்துடன் காவிரி ஆற்றில் புனிதநீராடிய பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு, சிவன் கோவில் முன்பு உள்ள இரண்டு விநாயகர் கோவில், காளியம்மன் கோவில், அரண்மனை சாவடி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் வழியாக, நாவலடியான் கோவில் வந்தனர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாலை முதல்கால யாக பூஜை தொடங்கியது.

    நேற்று முன்தினம் காலை வேதபாராயணம், இரண்டாம் கால யாகபூஜை, மதியம் கோபுரங்களுக்கு கலசங்கள் வைத்து, விமானம் கண் திறப்பு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை மூன்றாம் காலயாக பூஜை நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் நான்காம் கால யாகபூஜை செய்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்படுதல், காலை 5.30 மணிக்கு மேல், அரண்மனை சாவடி விநாயகர், சிவன் கோவில் நுழைவுவாயில் உள்ள மணியன்குல, கண்ணந்தகுல விநாயகர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மேல், காளியம்மன் கோவில், ராஜகோபுரம், பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மேல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் செல்லாண்டி அம்மன், நாவலடி கருப்பண்ணசாமி, நாவலடியான் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டதுடன், கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. அப்போது ராஜகோபுரத்தை கருடன் மூன்று முறை சுற்றியதை பார்த்த பக்தர்கள் வானத்தை நோக்கி இருகரம் கூப்பி வணங்கினார்கள். அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை, நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடிபாட்டு மக்களும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி கோவை மண்டல போலிஸ் ஐ.ஜி. பாரி தலைமையில், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மேற்பார்வையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கொங்குவேளாளர் சமூக மணியன்குல, கண்ணந்தகுல குடிபாட்டு மக்கள், பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் ஆலயத்திருப்பணிக்குழு செய்து இருந்தனர். 
    Next Story
    ×