search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    புகழ்பெற்ற குரு தலமாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
    X

    புகழ்பெற்ற குரு தலமாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

    • இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
    • முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும்.

    பழமையான கோவில்

    தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும். இக்கோவில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    ராஜகோபுரம்

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    தல வரலாறு

    தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார்.

    அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியதாக வரலாறு கூறுகிறது.

    திருச்செந்தூர் சிறப்பு

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப் பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீரவாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைவித்த தாரகாசூரன், சிங்கமுகன், சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவாச்சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன்,சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப் பெருமானைப்பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப் படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அப்போது தான் முருகன் என்பவன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதபூமி திருச்செந்தூர். இது திருநெல்வேலியிருந்து சுமார் 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நக்கீரர் வாக்குப்படி இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் 2-வது படைவீடாகும். இத்தலத்தில் ஓயாமல் கடல் அலைகள் சுழன்று அடிப்பதால் அலைவாய், திருச்சீரலைவாய் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் முருகன் சூரனை அழித்து வெற்றி பெற்ற காரணத்தால் ஜெயந்திபுரம் என்றும் செந்திலாண்டவன் கொலுவிருந்து ஆட்சி செய்வதால் செந்திலம்பதி என்றும் இத்தலம் பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளது.

    இத்தலத்தில் சூரசம்ஹார விழாவினைக் காணக்கண்கோடி வேண்டும். மேலும் முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படும் பெருவிழாவாகும். முருகப் பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்து வரும் போது தமது படைகளுடன் இந்த திருச்செந்தூர் தலத்தில் வந்து தங்கினார். இங்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கிய செந்திலாண்டவனை தேவகுருவாகிய வியாழபகவான் வந்து பூஜித்தார்.

    அந்த குருபகவானிடமே அசுரர்களின் வரலாறுகளை முருகன் விரிவாகக் கேட்டறிந்தான். அதனால்தான் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    முருகன் வீரபாகுவைத் தூதனுப்பி சூரபத்மனுக்குப் பல அறிவுரைகள் கூறினார். அவன் அவற்றைக் கேட்கவில்லை.

    இதனால் சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். கடைசியில் பல மாயங்கள் புரிந்து கடலில் பெரிய மாமரமாய் நின்ற சூரனை தம் வேலால் பிளந்து, ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை சேவல் கொடியாகவும் கொண்டு பகைவனுக்கும் அருள் புரிந்தான் செந்தில் வேலவன்.

    மும்மூர்த்தி முருகன்

    திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    சக்கரம் கொடுத்த பெருமாள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

    முருகனின் திரு உருவங்கள்

    1. சக்திதரர், 2. கந்தசுவாமி, 3. தேவசேனாதிபதி, 4.சுப்பிரமணியர், 5.கஜவாகனர், 6.சரவணபவர், 7.கார்த்திகேயர், 8.குமாரசுவாமி, 9.சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளிகல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 15. கிரவுஞ்ச பதனர், 16. சிகிவாகனர்.

    பஞ்சலிங்க தரிசனம்

    முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. வெளியிலிருந்தபடி முருகரைத் தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடப்புறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலப்புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.

    Next Story
    ×