search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பாவங்கள் போக்கும் பஞ்ச நரசிம்மா்கள் திருக்கோவில்- மயிலாடுதுறை
    X

    பாவங்கள் போக்கும் பஞ்ச நரசிம்மா்கள் திருக்கோவில்- மயிலாடுதுறை

    • அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
    • திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர்.

    பாவங்கள் போக்கும் வைணவ திருத்தலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பஞ்ச நரசிம்மா்கள் அருள்பாலிக்கும் இடமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், வீர நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    முற்காலத்தில் இரணியன் என்ற அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    5 நரசிம்மர்கள்

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர். இந்த நரசிம்மர்களை அவர்கள் அவதாரம் செய்த சுவாதி நட்சத்திரத்தன்று அல்லது சனிக்கிழமைகளில் ஒரே நாளில் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும் என்பதில் ஐயம் இல்லை.

    திருமங்கை மன்னன் என்பவர் திருக்குரவலூரை தலைமை இடமாக கொண்டு அரசாட்சி புரிந்ததாகவும், ஒரு கட்டத்தில் மேற்கண்ட நரசிம்மர் மீது கொண்ட பற்றால் துறவறம் பூண்டு திருமங்கை ஆழ்வாராக திருநாமம் கொண்டு 5 நரசிம்மர்களுக்கும் பணிவிடை செய்ததாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. இன்றளவும் திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற பெருமாள் கோவில்கள் 108 வைணவ திவ்ய தேச கோவில்களாக அழைக்கப்படுகிறது.

    திருமங்கையாழ்வார்

    திருமங்கையாழ்வார் திருகுரவலூர் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீர நரசிம்மர் மங்கை மடத்தில் கோவில் கொண்டு வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இவரை வணங்குபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குவதோடு வீரத்தை தருபவர் என புராண வரலாறுகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் தினமும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த கோவிலில் அன்னதானம் வழங்கியதால் மங்கையர் மடம் என்றும் தற்போது அது மருவி தற்போது கோவில் உள்ள இடம் மங்கைமடம் என அழைக்கப்படுகிறது.

    பூமியின் வடிவம்

    உக்கிர நரசிம்மர், திருமங்கையாழ்வார் பிறந்த திருக்குரவலூரில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். உக்கிர நரசிம்மரை வழிபட்டால் பித்ருக்கள் தோஷம், எதிரிகளால் பயம் நீங்கி செல்வ செழிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகம். இவருக்கு மாதம்தோறும் அமாவாசை, சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    யோக நரசிம்மர் திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பூமியின் வடிவமாக கருதப்படும் இவரை வணங்கினால, பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்குவதோடு, வாழ்வில் மிகப்பெரிய யோகத்தை இவர் அருள்வாா் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ேயாகநரசிம்மருக்கு வில்வத்தை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்படும். இந்த நரசிம்மருக்கு வெல்ல பானகத்தை நெய்வேத்தியம் செய்து வழிபடுவது மிக உகந்ததாகும்.

    ஹிரண்ய நரசிம்மர், திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் ஆகாயத்தை நோக்கி தனி சன்னதியில் கோவில் கொண்டிருப்பது மிகவும் விசேஷமானது. இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். இவர், 8 கைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

    மகாலட்சுமி

    லட்சுமி நரசிம்மருக்கு திருவாலியில் கோவில் உள்ளது. இங்கு மகாலட்சுமி வலதுபுரத்தில் அமர்ந்து கைகூப்பி காட்சியளிக்கிறார். தீர்த்த வடிவமான இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமணத்தடை நீங்கி, வேலைவாய்ப்பு கிடைப்பது நிச்சயம்.

    பாவங்கள் போக்கும் பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் வழிபடுவது பல்வேறு சிறப்புகளை தரும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.

    முக்கிய விழாக்கள்

    மங்கை மடம் வீர நரசிம்மர் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம், திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கும்.

    சர்வ தோஷங்களையும் நீக்கும் பஞ்சநரசிம்மர்கள்

    உயிரிழந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்ய தவறும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதேபோல முற்பிறவியில் நாம் செய்த பாவத்தின் விளைவு மறுபிறவியில் நம்மை இன்னலுக்குள்ளாக்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் அருகே கோவில் கொண்டுள்ள பஞ்ச நரசிம்மர்களும் சர்வதோஷங்களை போக்கும் நரசிம்மர்களாக உள்ளனர். தீராத நோய்களை தீர்த்து பித்ரு தோஷம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை ஆகியவற்றை தங்கள் பக்தர்கள் வாழ்வில் இருந்து நீக்குவதால் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளனா். வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை போன்றவற்றை போக்கி மழலை செல்வ பாக்கியம் பெற பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் பஞ்ச நரசிம்மர்களை தரிசனம் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வருகிறார்கள்.

    கோவில்களுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் உள்ள பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த பஞ்ச நரசிம்மர் கோவில்களை(5 கோவில்கள்) தரிசிக்க பஸ் அல்லது ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்து அங்கிருந்து பூம்புகாா் செல்லும் பஸ்சில் ஏறி மங்கைமடம் என்ற பகுதியில் இறங்கி அருகருகே இருக்கும் 5 நரம்சிம்மர் கோவில்களையும் ஒருங்கிணைந்து தரிசிக்கலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இந்த கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.

    Next Story
    ×