என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
    X
    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்

    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்

    திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது.
    புராண பெயர்(கள்):    மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி
    மூலவர்:    உத்வாகநாதர், அருள்வள்ளநாதர்
    தாயார்:    கோகிலா
    தல விருட்சம்:கருஊமத்தை
    ஊர்:    திருமணஞ்சேரி
    மாவட்டம்:    மயிலாடுதுறை

    திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.

    சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.

    இங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோவிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.

    ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள். பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது. இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும். கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.

    கோவிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது.

    இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.

    அமாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர். குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.

    சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.

    இத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.

    சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.
    Next Story
    ×