search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அக்னீசுவர சுவாமி திருக்கோவில் கஞ்சனூர், கும்பகோணம்
    X
    அக்னீசுவர சுவாமி திருக்கோவில் கஞ்சனூர், கும்பகோணம்

    அக்னீசுவர சுவாமி திருக்கோவில் கஞ்சனூர், கும்பகோணம்

    ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.
    சுவாமி: அக்னீசுவரர்
    அம்பாள்: கற்பகாம்பாள்
    மூர்த்தி: அக்னீசுவரர்
    தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
    தலவிருட்சம்: பலாசம்.
    தலச்சிறப்பு: இத்தலம் நவக்கிரக தலங்களில் சுக்கிரன் தலமாக விளங்குகிறது.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.

    வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது. வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது. எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.

    சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது. பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு. நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை. மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை. மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.

    தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார். நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.

    சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான். இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்

    சிவபெருமான் சுதர்சனரிடம் “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான். சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான். அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார். பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம். உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.

    தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவலிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார். தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார். தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.

    அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.

    ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவ பரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.

    ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

    ஹரதத்தருக்கு திருவிளையாடல் புரிந்து அருளிய அக்னிஸ்வரர் - கற்பகாம்பிகை

    ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டி காவிரியில் நீராட போவதாக கூறினாள். அவளை புலையன் தடுத்து நிறுத்தி விட்டு, இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய். நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும். இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்த படியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.

    இதனைக் கண்ட ஹரதத்தர், பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியை தலை மீது வைத்துக்கொண்டார். அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்னீசுவரரும், கற்பகாம்பிகையும் ஆவர். ஹரதத்தா, உனக்குத் திருவடி தீட்சை செய்யவே இப்படித் திருவிளையாடல் செய்தோம் என திருவாய் மலர்ந்து அருளினார் பெருமான்.

    கோவில் நடை திறப்பு நேரம்

    நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

    கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் முகவரி

    அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்,
    கஞ்சனூர் அஞ்சல்,
    திருவிடை மருதூர் வட்டம்,
    தஞ்சை மாவட்டம், 609 804.

    Next Story
    ×