search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய நுழைவு வாயில். மீனாட்சி அம்மை, சுந்தரேஸ்வரர்
    X
    மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய நுழைவு வாயில். மீனாட்சி அம்மை, சுந்தரேஸ்வரர்

    கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம்

    கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தர் க்ஷேத்திர கோவை பதிகத்தில் கொத்தங்குடி என இத்தலத்தை குறிப்பிட்டு அருளியுள்ளார்.
    சோழமண்டலத்தில் தேவார பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. இவற்றுள் கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தர் க்ஷேத்திர கோவை பதிகத்தில் கொத்தங்குடி என இத்தலத்தை குறிப்பிட்டு அருளியுள்ளார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் கிழக்கே கொத்தங்குடி கிராமத்தில் ஆலயம் அமைத்து ஆராதித்து அருள் பெற்றுள்ளனர். தேவாதி தேவர்களும், மகா முனிவர்களும், ஆன்றோர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    பக்தர்களுக்கு உன்னதமான பக்தி பலன்களையும், செல்வங்களையும் வாரி வழங்கி மிகப்பெரிய ஆவுடையாருடன் மிக அழகான பானத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார் சுந்தரேஸ்வரர். இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரர் திருமேனி ஆனது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு மூர்த்தமாக காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் பீமன் மானசீகமாக பூஜை செய்ததால் பீமேஸ்வரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தில் பூக்களை மாலையாகக் கட்டி சூட்டுவதை விட உதிரியாக அதையே புஷ்பார்ச்சனை(புஷ்பாபிஷேகம்) இறைவனுக்கு செய்வதே தல சிறப்பாகும். இத் தலமானது மனிதன் எக்காலத்திலும் கர்வம் கொள்ளலாகாது என்பது கிருஷ்ண பகவான் அர்ஜுணனுக்கு உணர்த்தப்பட்ட திருத்தலம்.

    கொத்தங்குடி தலத்தில் அருளாட்சி செய்யும் மீனாட்சி அம்மை பக்தர்களின் குறைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை பல்வேறு தேவைகளை சுந்தரேஸ்வரரிடம் பக்தர்களுக்காக பரிந்து எடுத்துக்கூற, அதனை இறைவன் செவிமடுத்து கேட்பதற்கு ஏற்ப சற்றே தலை சாய்ந்து இருப்பது போல் இறைவன் திருமேனி அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

    புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.

    கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொட்டில் குழந்தை ரூபத்தில் குலம் செழிக்க, குலம் தழைக்க, புத்திர பாக்கிய பெரும்பேறு சந்தான விருத்தி நல்கி பேரருள் வழங்கும் தலமாக விளங்குகிறது.

    ஜனக மகாராஜன் நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் சஞ்சலப்பட்டு பின் யாக பூமியை உழுதபோது கிடைத்த மழலைச் செல்வம் தான் சீதை. தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அமிர்தம் பெற்று பிறந்தவர்கள்தான் ராம, லட்சுமண, பரத, சத்துருக்கணர்கள். அதைப்போல மலையத்துவஜனின் குறைதீர்க்க பிறந்தவள் மீனாட்சி.

    குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.

    இந்த ஆலயத்தின் நிர்வாக பணிகளை மீனாட்சி-சுந்தரேசுவரர் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதன் தலைவராக கே.ஜெயராமன், செயலாளராக வி.ரகுபதி, பொருளாளராக பி.மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்களாக விஜய், சுவாமிநாதன், முரளிதரன், ஆலோசகராக சங்கரன் ஆகியோர் உள்ளனர். மற்றும் ஆலய அர்ச்சகர் சுந்தரேஸ்வரர் சிவாச்சாரியார் மற்றும் கொத்தங்குடி கிராமவாசிகள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

    பரிகார பூர்த்தி செய்யும் முறை

    சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    கோவிலின் சிறப்புகள்

    ஆண்டுதோறும் பங்குனி பவுர்ணமி முதல் நாளில் இருந்து நான்கு நாட்களுக்கு சூரிய உதயத்தில் இருந்து சூரிய பகவான் தன் அருள் கரங்களால் இறைவன் மீது பற்றொளி வீசுவது தனிச்சிறப்பாகும்.

    1300 ஆண்டுகள் பழமையான தலம். தேவாரத்தில் திருஞான சம்பந்தர் போற்றிய வைப்புத்தலம். பீமன் இத்தல இறைவனை பூஜித்ததால் பீமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்தான பாக்கியம் அருளும் தலம்.

    மானசீகமான பூஜையே உயர்ந்தது என்று உணர்த்திய தலம். பக்தர்களின் குறைகளை செவிமடுத்து கேட்பதால் இறைவன் சற்றே தலை சாய்ந்து இருப்பது சிறப்பாகும்.

    சுந்தரேஸ்வரர் திருமேனியானது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு சிவ வடிவம் ஆகும்.

    முதற்கட்ட பரிகார முறை

    மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் மாத பிரதோஷங்கள், நவராத்திரி மற்றும் சிவராத்திரி சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும். மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். தினமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் பரிகாரம் செய்து வழிபடலாம்.

    கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
    Next Story
    ×