search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
    X
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

    பஞ்சபூத தலங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

    காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான இது, நிலத்தைக் குறிப்பதாகும். இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார்.
    காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான இது, நிலத்தைக் குறிப்பதாகும். இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார். ‘ஏகாம்பரநாதர்’ என்பது இவரது பெயர். அம்பாளின் திருநாமம், ‘காமாட்சி அம்மன்’ என்பதாகும். கருவறையில் உள்ள மூலவர் லிங்கத்தை ‘பிருத்வி லிங்கம்’ என்று அழைப்பார்கள். இந்த லிங்கம், மண்ணால் ஆனது. சுயம்பு லிங்கம். எனவே இந்த லிங்கத்திற்கு அபிஷேகங்கள் கிடையாது. மாறாக, லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்குத்தான் அபிஷேகங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன.

    மற்ற சிவாலயங்களைப் போல, இங்கு அம்மனுக்கு என்று தனியாக சன்னிதி கிடையாது. காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சி காமாட்சியே, அனைத்து சிவாலயங்களுக்குமான தேவி என்பதால், அங்குள்ள சிவாலயங்கள் எதிலுமே அம்பாளுக்கு என்று தனியாக சன்னிதி அமைக்கப்படுவதில்லை. தவிர விநாயகர், முருகன், போன்ற தெய்வங்களுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. 

    முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் தல விருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஆகும். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தலவரலாறு

    ஒரு முறை கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். ஈசனுக்கு ஒரு நொடிதான் என்றாலும் அது மனிதர்களுக்கு பல நூற்றாண்டு காலம் என்பதால், அதுவரை உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. இதைக்கண்டு பார்வதிதேவி வருத்தம் அடைந்தார். அவர் தன்னுடைய இந்த பாவத்தைப் போக்க, தவம் மேற்கொள்ள எண்ணினார். அதன்படி காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் அமைத்து பூஜித்தார்.

    பார்வதியின் தவத்தை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள்புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் ‘பிருத்வி லிங்கம்.’

    அதாவது தற்போதைய மூலவர். அம்மன் அருளும் காமகோட்டமே, காமாட்சி அம்மன் கோவிலாகத் திகழ்கிறது. பார்வதி கட்டித் தழுவியதால் ஏகாம்பரநாதர் கோவிலின் மூலவர் லிங்கம் ‘தழுவக் குழைந்தார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது ‘உன்னைப் பிரியேன்’ என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர், இந்தத் தலத்தில் பதிகம்பாடியதன் மூலமாக திரும்பப் பெற்றார்.

    ஆலய அமைப்பு

    சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயம், கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் ‘திருக்கச்சிஏகம்பம்’ என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான ராஜகோபுரம், 58.5 மீட்டர் உயரமும், ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவ ராயர் (கி.பி 1509) காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    காஞ்சிபுரம் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் உள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    Next Story
    ×